கோவை மாவட்டத்தில் 4 மலையேற்ற வழித்தடங்கள் தேர்வு!
GH News July 23, 2024 07:14 PM

கோவை: தமிழகத்தின் மலையேற்ற வழித்தட திட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள 4 வழித்தடங்கள் தேர்வாகி உள்ளன. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் 2018-ல் குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து மலையேற்றத்துக்கு வனத்துறை தடை விதித்தது. தற்போது6 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை பற்றியபுரிதலை ஏற்படுத்த மலையேற்றத்தை மீண்டும்தொடங்கியுள்ளது. அந்தவகையில், தமிழக வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4கோடியில் மேம்படுத்தப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக வனத்துறை ஆன்லைன் ட்ரெக்கிங் டிரெயில் அட்லஸ் மூலம் 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி வருகிறது. இதில் சவாலான மலையேற்றம் தொடங்கி குடும்பத்தினருடன் சென்று மலைப்பகுதிகளையும், இயற்கையையும் ரசிக்கும் வகையில் மலையேற்ற வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், மலையேற்ற பாதையின் நிலப்பரப்பு, அதன் தொலைவு, பயண வழிமுறைகள், உணவு, தண்ணீர் வசதிகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். ஒவ்வொரு மலையேற்ற பாதையின் சிறப்பு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இடம்பெற உள்ளது. இத்திட்டத்தில் வழிகாட்டியாக பழங்குடி மக்களை ஈடுபடுத்த வனத்துறை அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகம் உருவாக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 40 மலையேற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அளவிலான மலையேற்ற வழித்தடதிட்டத்தில், கோவை மாவட்டத்தில் கோவை வனச்சரகத்தில் செம்புக்கரை, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சாடிவயல் பகுதியில் இரண்டு வழித்தடங்கள், மேட்டுப்பாளையம் சரகத்தில் பரளியாறு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.