நீலகிரி மலை ரயில் வரும் 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
GH News August 10, 2024 05:11 PM

உதகை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக பாரம்பரியம் மிக்க மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இந்த மலை ரயில் இயக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் 6-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கல்லாறு ஹில் குரோவ் இடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணிக்காக நாளை (ஆக.9) முதல் வரும் 15-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.