அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.இதையடுத்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் ஏற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுதிய டிரம்ப், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தான், சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது மற்றும் எப்போது இந்தியா வந்து சேர்கிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது . இந்நிலையில் இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்களும் விரிவான பதிலளிக்க மறுத்துவிட்டனர் என கூறுகின்றனர். மேலும் அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறும் போது, " நான் எந்த ஒரு தகவலும் இது தொடர்பாக பகிர முடியாது என்றும் ஆனால், எல்லை விவகாரம் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமெரிக்கா கடுமையாக்கி இருக்கிறது என்பது பற்றி மட்டும் என்னால் சொல்ல முடியும்" என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்த ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் ஏற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பிறகு இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.