தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சொத்து பிரச்சனைக்காக பெற்ற தந்தையை 15 முறை நடுரோட்டில் கத்தியுடன் விரட்டிச் சென்று குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தின் லாலாபேட்டாவைச் சேர்ந்த ஆரேலி மொகிலி (45), பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் பணிபுரிகிறார். அவரது மகன் சாய் குமாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருப்பினும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மொகிலி, எப்போதும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிடுவார். குடும்ப தகராறு மற்றும் சில காலமாக சொத்து தகராறுகளும் இருந்து வருகின்றன. இதனால் விரக்தியடைந்த சாய்குமார், தனது தந்தையைக் கொல்ல முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று மதியம் லாலாபேட்டையில் இருந்து பேருந்தில் பயணம் செய்த மொகலியை சாய்குமார் பின்தொடர்ந்தார்.
மொகிலி இ.சி.ஐ.எல். பேருந்து முனையத்தில் பேருந்திலிருந்து இறங்கியவுடன், பின்னால் இருந்து துரத்தி சென்று கத்தியால் அவரைத் தாக்கினார். சுமார் 15 முறை நடுரோட்டில் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும்போதோ கண்மூடித்தனமாக குத்தினார். இதைக் கவனித்த பொது மக்கள் மொகிலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மொகிலி காலமானார். நடுரோட்டில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சிகள் அங்கு அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், போலீசார் சாய்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.