எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து விபத்து! வீடே எரிந்தது... 9 மாத குழந்தை உட்பட 3 பேர் காயம்
Top Tamil News March 16, 2025 05:48 PM

சென்னை மதுரவாயலில் சார்ஜர் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் எரிந்து விபத்துக்குள்ளானது.

மதுரவாயல்,  பாக்யலட்சுமி நகர் அன்னை இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நடராஜன் தான் பயன்படுத்தி வரும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம் போல கீழ் தளத்தில் "சார்ஜ்" போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று உறங்க சென்றுவிட்டார். 

இந்த நிலையில் அதிகாலை 5.15 மணி அளவில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் இருந்து கரும்புகை கிளம்பியதாக தெரிகிறது. இதையறிந்த கவுதம் முதல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பின் தொடர்ந்து கவுதமின் மனைவி மஞ்சு, 9 மாத கைக்குழந்தை எழிலரிசியை தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்து ஓடி வந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக பரவிய தீயில் கவுதம், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகிய 3பேரும் தீயில் கருகி பலத்த காயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து 3பேரையும் மீட்டனர். 

இதில் 50 சதவீதம் தீக்காயமடைந்த கைக்குழந்தை மற்றும் லேசான காயமடைந்த கவுதமின் மனைவி மஞ்சு இருவரும் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 41 சதவீத காயமடைந்த கவுதமுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜில் போட்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து 3 பேர் உடல் கருகிய சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.